عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

Taha [Taha] - Tamil Translation - Omar Sharif

Surah Taha [Taha] Ayah 135 Location Maccah Number 20

தா ஹா.

(நபியே!) நாம் இந்த குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது இறக்கவில்லை,

எனினும், (அல்லாஹ்வை) அஞ்சுகிறவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக (இதை நாம் இறக்கினோம்).

இது பூமியையும் உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.

ரஹ்மான், அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்டான்.

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவையும் ஈரமான மண்ணுக்குக் கீழ் உள்ளவையும் அவனுக்கே உரியன.

நீர் பேச்சை பகிரங்கப்படுத்தினாலும் (அல்லது மறைத்தாலும்) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மிக மறைந்ததையும் நன்கறிவான்.

அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவனுக்கு மிக அழகிய பெயர்கள் உள்ளன.

(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?

அவர் ஒரு நெருப்பைப் பார்த்தபோது (நிகழ்ந்த சம்பவத்தின் செய்தி உமக்கு வந்ததா?). ஆக, அவர் தனது குடும்பத்தினருக்குக் கூறினார்: “(இங்கே) தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் கண்டேன். (நான் அங்கு சென்று) அதிலிருந்து ஒரு சிறிய நெருப்பு கொள்ளியை உங்களிடம் நான் கொண்டு வரலாம். அல்லது, நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டியை நான் பெறலாம்.

ஆக, அவர் அதனிடம் வந்தபோது (இறைவனின் புறத்திலிருந்து) அழைக்கப்பட்டார், மூஸாவே!

நிச்சயமாக நான்தான் உமது இறைவன். ஆக, உமது செருப்புகளை கழட்டுவீராக! நிச்சயமாக நீர் துவா என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

இன்னும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆகவே, (உமக்கு) வஹ்யி அறிவிக்கப்படுபவற்றை செவிமடுப்பீராக!

நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக!

நிச்சயமாக மறுமை (உண்மைதான். அது ஒரு நாள்) வரக்கூடியதாகும், - அதை (யாரும் அறியாதவாறு) நான் மறைத்து வைத்திருப்பேன், - ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்ததற்கு (அங்கு) கூலி கொடுக்கப்படுவதற்காக.

ஆக, அதை நம்பிக்கை கொள்ளாமல், தனது மன இச்சையை பின்பற்றியவன் அதை விட்டு உம்மை (தவறான பாதையின் பக்கம்) திருப்பிவிட வேண்டாம், நீர் அழிந்து விடுவீர்.

மூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?”

அவர் கூறினார்: அது எனது கைத்தடி. அதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இன்னும், அதன் மூலம் என் ஆடுகளுக்கு இலைகளை பறிப்பேன். இன்னும், எனக்கு அதில் மற்ற பல தேவைகளும் உள்ளன.

அவன் கூறினான்: மூஸாவே! அதை நீர் எறிவீராக!

ஆக, அதை அவர் எறிந்தார். ஆக, அது விரைந்து ஓடுகின்ற ஒரு பாம்பாக ஆகிவிட்டது.

அவன் கூறினான்: அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர். நாம் அதை அதன் முந்திய தன்மைக்கே திருப்புவோம்.

இன்னும், உமது கரத்தை புஜத்தின் கீழ் சேர்த்து வைப்பீராக! (பிறகு நீர் அதை எடுக்கும்போது) அது (எவ்வித) நோயுமின்றி (பனிக்கட்டியைப் போன்று) வெண்மையாக வெளியே வரும். இது மற்றுமோர் அத்தாட்சியாகும்.

(மூஸாவே!) நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்).

ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்புமீறி விட்டான்.

அவர் கூறினார்: என் இறைவா! எனக்கு என் நெஞ்சை விரிவாக்கு!

இன்னும், என் காரியத்தை எனக்கு இலகுவாக்கு!

இன்னும், கொன்னலை என் நாவிலிருந்து அவிழ்த்துவிடு!*

அவர்கள் என் பேச்சை (தெளிவாக) புரிந்து கொள்வார்கள்.

இன்னும், என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து!

என் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)!

அவர் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து!

இன்னும், எனது (நபித்துவப்) பணியில் அவரை (என்னுடன்) இணைத்துவிடு!

நாங்கள் உன்னை அதிகம் துதிப்பதற்காக,

இன்னும், நாங்கள் உன்னை அதிகம் நினைவு கூர்வதற்காக (என் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்!).

நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய்.

அவன் கூறினான்: “மூஸாவே! உமது கோரிக்கையை நீர் கொடுக்கப்பட்டீர்.”

இன்னும், உம்மீது (இது அல்லாத) வேறு ஒரு முறையும் திட்டமாக நான் அருள் புரிந்திருந்தேன்,

அறிவிக்கப்பட வேண்டியவற்றை நாம் உமது தாய்க்கு அறிவித்தபோது.

அதாவது: அவரை (நீர் செய்து வைத்திருந்த) பேழையில் போடுவீராக! பிறகு, அதை (நைல்) நதியில் போடுவீராக! நதி அதை கரையில் எறியும். எனது எதிரி, இன்னும் அவரது எதிரி அதை எடுப்பான் (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). இன்னும், உம்மீது அன்பை என் புறத்திலிருந்து ஏற்படுத்தினேன். இன்னும், என் கண் பார்வையில் (எனது நாட்டப்படி) நீ (வளர்க்கப்படுவதற்காகவும்) பராமரிக்கப்படுவதற்காக(வும் உம்மீது பிறருக்கு அன்பை ஏற்படுத்தினேன்).

உமது சகோதரி (அந்த பேழையுடன்) நடந்துசென்றபோது, “அவருக்கு பொறுப்பேற்பவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” என்று (அந்த பேழையை எடுத்தவர்களிடம்) அவள் கூறினாள். ஆக, (உமது தாய்) கண் குளிர்வதற்காகவும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் உம்மை உமது தாயிடம் நாம் திரும்பக் கொண்டு வந்தோம். இன்னும் நீர் ஓர் உயிரை கொன்று இருந்தீர். ஆக, அந்த துக்கத்திலிருந்து உம்மை நாம் பாதுகாத்தோம். இன்னும் நாம் உம்மை நன்கு சோதித்தோம். ஆக, மத்யன்வாசிகளிடம் பல ஆண்டுகள் நீர் தங்கினீர். பிறகு (உம்மை தூதராக அனுப்புவதற்கு) நிர்ணயிக்கப்பட்ட காலத்தை மூஸாவே! நீர் அடைந்தீர்.

இன்னும், நான் எனக்காக உம்மைத் தேர்வு செய்திருக்கிறேன்.

நீரும் உமது சகோதரரும் என் அத்தாட்சிகளுடன் (ஃபிர்அவ்னிடம்) செல்வீர்களாக! இன்னும், என்னை நினைவு கூர்வதில் நீங்கள் இருவரும் பலவீனப்பட்டு (பின்தங்கி) விடாதீர்கள்.

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்வீர்களாக! நிச்சயமாக அவன் (நிராகரிப்பில்) எல்லை மீறிவிட்டான்.

ஆக, அவனுக்கு (நீர் உபதேசம் செய்யும்போது) மென்மையான சொல்லை நீங்கள் இருவரும் சொல்லுங்கள்! அவன் (உங்கள் உபதேசத்தால்) நல்லறிவு பெறலாம், அல்லது (அல்லாஹ்வை) பயப்படலாம்.

(அவ்விருவரும்) கூறினார்கள்: எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் அவன் எங்கள் விஷயத்தில் அவசரப்பட்டு எங்களை தண்டித்துவிடுவதை; அல்லது, அவன் (எங்கள் மீது) எல்லை மீறுவதை (எங்களை கொன்றுவிடுவதை) பயப்படுகிறோம்.

(அல்லாஹ்) கூறினான்: நீங்கள் இருவரும் பயப்படாதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் இருவருடன் இருக்கிறேன். நான் செவியுறுகிறேன்; இன்னும், பார்க்கிறேன்.

ஆக, அவனிடம் நீங்கள் இருவரும் வாருங்கள்! பிறகு, (அவனிடம்) கூறுங்கள்: நிச்சயமாக நாங்கள் உனது இறைவனின் தூதர்கள் ஆவோம். ஆகவே, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பி விடு! அவர்களைத் தண்டிக்காதே! (துன்புறுத்தாதே!) திட்டமாக உனது இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகுக!

நிச்சயமாக நாங்கள், எங்களுக்கு திட்டமாக வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது: “எவர் பொய்ப்பிப்பாரோ, புறக்கணித்து, திரும்புவாரோ அவர் மீது நிச்சயமாக தண்டனை நிகழும்”

அவன் கூறினான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?”

(மூஸா) கூறினார்: எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பை (அதுபோன்ற ஒரு ஜோடியை - துணையைக்) கொடுத்து, பிறகு (அதற்கு) வழிகாட்டினானோ அவன்தான் (நாங்கள் வணங்கும்) எங்கள் இறைவன்.

அவன் கூறினான்: “ஆக, முந்திய தலைமுறையினர்களின் நிலை என்னவாகும்.”

(மூஸா) கூறினார்: அவர்களைப் பற்றிய ஞானம் என் இறைவனிடம் ஒரு பதிவுப்புத்தகத்தில் (பாதுகாப்பாக) இருக்கிறது. என் இறைவன் தவறிழைக்க மாட்டான். இன்னும், மறக்கமாட்டான்.

அவன் எத்தகையவன் என்றால் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை (அவற்றில் நீங்கள் சென்றுவருவதற்காக) ஏற்படுத்தினான். இன்னும், வானத்திலிருந்து மழையை இறக்கினான். ஆக, அதன் மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகை(உணவு வகை)களை நாம் உற்பத்தி செய்கிறோம்.

(அந்த உணவுகளிலிருந்து நீங்களும்) சாப்பிடுங்கள்! உங்கள் கால்நடைகளையும் மேய்த்துக் கொள்ளுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.

அதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். இன்னும், அதில்தான் உங்களை திரும்பக் கொண்டுவருவோம். இன்னும், அதிலிருந்துதான் மற்றொரு முறை உங்களை வெளியேற்றுவோம்.

அவனுக்கு (நாம் காட்டவேண்டிய) நமது அத்தாட்சிகள் அனைத்தையும் காண்பித்தோம். எனினும், அவன் (அவற்றை) பொய்ப்பித்தான். இன்னும், (அவற்றை) ஏற்க மறுத்தான்.

அவன் கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”அவன் கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”

ஆக, நிச்சயமாக நாமும் அதுபோன்ற ஒரு சூனியத்தை உம்மிடம் கொண்டு வருவோம். ஆகவே, எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் ஒரு சமமான இடத்தில் (நாம் ஒன்று சேர) குறிப்பிட்ட ஒரு நேரத்தை முடிவு செய்வீராக! நாமும் அதை மீற மாட்டோம். நீயும் அதை மீறக் கூடாது.

அவர் கூறினார்: உங்களுக்கு குறிக்கப்பட்ட நேரம் “யவ்முஸ் ஸீனா” (என்ற உங்கள் பெருநாள்) ஆகும். இன்னும், (அந்த நாளில்) மக்கள் முற்பகலில் ஒன்று திரட்டப்பட வேண்டும்!

ஆக, ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். இன்னும், (மூஸாவை தோற்கடிக்க) தனது தந்திர யுக்திகளை ஒன்றிணைத்தான். பிறகு (குறிக்கப்பட்ட நேரத்தில் அந்த இடத்திற்கு சூனியக்காரர்களுடன்) வந்தான்.

அவர்களுக்கு மூஸா கூறினார்: “உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள்! அவன் உங்களை (கடுமையான) தண்டனையால் அழித்து விடுவான். (அல்லாஹ்வின் மீது பொய்யை) இட்டுக்கட்டியவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.”

ஆக, (மூஸாவை எதிர்த்து சூனியம் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட) அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் விவாதித்தனர். இன்னும், அவர்கள் இரகசியமாக பேசினர்.

அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள்தான். அவ்விருவரும் தங்கள் சூனியத்தினால் உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கும்; உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் நாடுகிறார்கள்.”

“ஆகவே, உங்கள் தந்திர யுக்திகளை உறுதிப்படுத்தி, பிறகு ஓர் அணியாக (அவரை எதிர்க்க) வாருங்கள். இன்றைய தினம் யார் (மற்றவரை) மிகைப்பாரோ அவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்.”

(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “மூஸாவே! ஒன்று, நீர் (முதலில்) எறிவீராக! அல்லது, எறிபவர்களில் முதலாமவர்களாக நாங்கள் இருக்கிறோம்.”

(மூஸா) கூறினார்: “மாறாக, (முதலாவதாக) நீங்கள் எறியுங்கள்.” ஆக, அ(வர்கள் எறிந்த அ)ப்போது அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தால் நிச்சயமாக அவை ஓடுவதாக அவருக்கு தோற்றமளிக்கப்பட்டது.

ஆக, மூஸா தனது உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்.

நாம் கூறினோம்: “பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் மிகைத்தவர் (வெற்றிபெறுபவர்) ஆவீர்.

இன்னும், உமது கையில் உள்ளதை நீர் எறிவீராக! அது அவர்கள் செய்ததை (எல்லாம்) விழுங்கி விடும். அவர்கள் செய்ததெல்லாம் ஒரு சூனியக்காரனின் சூழ்ச்சிதான். இன்னும், சூனியக்காரன் எங்கிருந்து வந்தாலும் (அவன் என்னதான் தந்திரம் செய்தாலும்) வெற்றிபெற மாட்டான்.

ஆக, (இதை கண்ணுற்ற) சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர். ஹாரூன் இன்னும், மூஸாவுடைய இறைவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினார்கள்.

(ஃபிர்அவ்ன்) கூறினான்: நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னர் அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் பெரிய(தலை)வர் ஆவார். ஆகவே, நிச்சயமாக நான் உங்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். இன்னும், பேரீச்ச மரத்தின் பலகைகளில் உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன். இன்னும், தண்டிப்பதில் எங்களில் யார் கடினமானவர், நிரந்தரமானவர் என்பதை நிச்சயமாக நீங்கள் (எல்லோரும்) அறிவீர்கள்.

(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் எது வந்ததோ அதை விடவும்; இன்னும், எங்களைப் படைத்த (இறை)வனை விடவும் உன்னை (பின்பற்றுவதை) நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை (முடிவு) செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ (முடிவு) செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)”

“நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டோம், அவன் எங்களுக்கு எங்கள் பாவங்களையும் சூனியம் செய்வதற்கு நீ எங்களை நிர்ப்பந்தித்ததையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக. அல்லாஹ், (நற்கூலி கொடுப்பதில்) மிகச் சிறந்தவன், (தண்டிப்பதில்) மிக நிரந்தரமானவன்.”

நிச்சயமாக விஷயமாவது, எவன் தன் இறைவனிடம் பாவியாக வருகிறானோ நிச்சயமாக அவனுக்கு நரகம்தான். அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; (நிம்மதியாக) வாழவும் மாட்டான்.

இன்னும், யார் அவனிடம் நன்மைகளை செய்த நம்பிக்கையாளராக வருவாரோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) மிக உயர்வான தகுதிகள் உண்டு.

‘அத்ன்’ எனும் சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றின் கீழே நதிகள் ஓடும். அவற்றில் அவர்கள் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இன்னும், யார் (இணைவைத்தலை விட்டும் பாவங்களை விட்டும் நீங்கி) பரிசுத்தவானாக இருந்தாரோ அவருக்குரிய நற் கூலியாகும் இது.

மூஸாவிற்கு திட்டவட்டமாக நாம் வஹ்யி அறிவித்தோம்: அதாவது, “என் அடியார்(களான இஸ்ரவேலர்)களை இரவில் அழைத்துச் செல்வீராக! ஆக, அவர்களுக்காக கடலில் (ஈரமற்ற) காய்ந்த பாதையை ஏற்படுத்துவீராக! (ஃபிர்அவ்னால் நீங்கள்) பிடிக்கப்படுவதை(யும்) நீர் பயப்பட மாட்டீர்; (கடலில் நீங்கள் மூழ்கிவிடுவதையும்) அஞ்சமாட்டீர்.”

ஃபிர்அவ்ன் தனது படைகளுடன் அவர்களை பின்தொடர்ந்தான். ஆக, அவர்களை கடலில் இருந்து எது சூழ இருந்ததோ அது அவர்களை சூழ்ந்து கொண்(டு அழித்து விட்)டது.

ஃபிர்அவ்ன் தன் சமுதாயத்தினரை வழிகெடுத்தான். இன்னும், (அவர்களுக்கு) அவன் நேர்வழி காட்டவில்லை.

இஸ்ரவேலர்களே! திட்டமாக உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களை நாம் பாதுகாத்தோம். இன்னும், தூர் மலையின் வலது பகுதியை (நீங்கள் வந்தடையும்போது அங்கு தவ்ராத் கொடுக்கப்படும் என்று) உங்களுக்கு வாக்களித்தோம். இன்னும், உங்கள் மீது “மன்னு” “ஸல்வா” வை இறக்கினோம்.

நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள். (வாழ்வாதாரத்தை தேடுவதிலும் அதை செலவழிப்பதிலும் என் கட்டளையை மீறாதீர்கள்! அப்படி மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். இன்னும், எவன் மீது என் கோபம் இறங்கிவிடுமோ திட்டமாக அவன் (துர்ப்பாக்கியமடைந்து நரகத்தில்) வீழ்ந்து விடுவான்.

இன்னும், (பாவங்களிலிருந்து) யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மை செய்து பிறகு, நேர்வழி பெற்றாரோ அவரை நிச்சயமாக நான் மிகவும் மன்னிக்கக் கூடியவன் ஆவேன்.

மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டும் உம்மை எது விரைவுபடுத்தியது?

அவர் கூறினார்: அவர்கள் என் அடிச்சுவட்டின் மீது (அதைப் பின்பற்றி எனக்குப் பின்னால் வந்த வண்ணமாக) இருக்கிறார்கள். இன்னும், “நீ (என் மீது) திருப்திபடுவதற்காக (அவர்களுக்கு முன்னால்) உன் பக்கம் நான் விரைந்(து வந்)தேன்.”

(அல்லாஹ்) கூறினான்: நிச்சயமாக நாம் உமக்குப் பின்னர் உமது சமுதாயத்தை திட்டமாக சோதித்தோம். இன்னும், அவர்களை ஸாமிரி வழிகெடுத்தான்.

ஆக, மூஸா கோபமுற்றவராக, கவலையடைந்தவராக தனது சமுதாயத்திடம் திரும்பினார். அவர் கூறினார்: “என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகிய வாக்கை வாக்களிக்கவில்லையா? (என்னை விட்டுப் பிரிந்த) காலம் உங்களுக்கு தூரமாகிவிட்டதா? அல்லது, உங்கள் மீது உங்கள் இறைவன் புறத்திலிருந்து கோபம் இறங்குவதை நீங்கள் நாடுகிறீர்களா? அதனால் என் (இறைவன் நமக்கு) குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) மாறு செய்தீர்களா?”

அவர்கள் கூறினார்கள்: “உமது குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) நாங்கள் எங்கள் விருப்பப்படி மாறுசெய்யவில்லை. என்றாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுடைய) மக்களின் ஆபரணங்களில் இருந்து பல சுமைகளை நாங்கள் சுமக்கும்படி ஏவப்பட்டோம். பிறகு, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம். ஆக, அவ்வாறே சாமிரியும் (தன்னிடமுள்ளதை) எறிந்தான்.”

ஆக, அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றை, அதாவது (காளைக் கன்றின் உருவத்தில் செய்யப்பட்ட உயிரற்ற) ஓர் உடலை உருவாக்கினான். அதற்கு மாட்டின் சத்தம் இருந்தது. ஆக, (இதைப் பார்த்தவர்களில் சிலர்) கூறினார்கள்: “இதுதான் உங்கள் தெய்வமும் மூஸாவுடைய தெய்வமும் ஆகும். ஆனால், அவர் (அதை) மறந்து(விட்டு எங்கோ சென்று) விட்டார்.”

(அவர்களின்) எந்த பேச்சுக்கும் அது பதில் பேசாமல் இருப்பதையும் அவர்களுக்கு அது தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் அது ஆற்றல் பெறாமல் இருப்பதையும் அவர்கள் கவனிக்கவேண்டாமா?

இன்னும், இதற்கு முன்னர் திட்டவட்டமாக ஹாரூன் அவர்களுக்கு கூறினார்: “என் சமுதாயமே! நிச்சயமாக இதன்மூலம் நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் ரஹ்மான்தான். ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும், என் கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள்.”

அவர்கள் கூறினார்கள்: மூஸா எங்களிடம் திரும்புகின்ற வரை நாங்கள் இதை வணங்கியவர்களாகவே நீடித்திருப்போம்.

(மூஸா) கூறினார்: ஹாரூனே! அவர்கள் வழிதவறி விட்டார்கள் என்று நீர் அவர்களைப் பார்த்தபோது உம்மை எது தடுத்தது,

நீர் என்னைப் பின்பற்றாமல் இருக்க? ஆக, எனது கட்டளைக்கு நீர் மாறு செய்துவிட்டீரா?

(ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! எனது தாடியையும் என் தலை (முடி)யையும் பிடி(த்திழு)க்காதே! “என் கூற்றை நீர் கவனிக்காமல் இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் பிரிவினை செய்து விட்டாய்!” என்று நீர் கூறிவிடுவதை நிச்சயமாக நான் பயந்தேன்.

(மூஸா) கூறினார்: ஆக, ஸாமிரியே! உன் விஷயம்தான் என்ன?

அவன் கூறினான்: “எதை (மக்கள்) பார்க்கவில்லையோ அதை நான் பார்த்தேன். ஆகவே, (மூஸாவை பார்க்க வந்த வானத்) தூதருடைய (குதிரையின்) காலடி சுவட்டிலிருந்து ஒரு பிடி (மண்ணை) எடுத்து, (காளைக் கன்றின் சிலையில்) எறிந்தேன். இப்படித்தான் எனக்கு என் மனம் (இந்த தீய செயலை நான் செய்ய வேண்டும் என்று) அலங்கரித்தது.

(மூஸா) கூறினார்: ஆக, நீ சென்று விடு. இவ்வாழ்க்கையில் “லா மிஸாஸ்” (என்னைத்) தொடாதீர் என்று நீ (சதா) சொல்லியவனாக இருப்பதுதான் நிச்சயமாக உனக்கு நிகழும். இன்னும், உமக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அதை நீ தவறவிடமாட்டாய். நீ எதை வணங்கியவனாக இருந்தாயோ அந்த உனது தெய்வத்தைப் பார். நிச்சயமாக நாம் அதை எரித்து விடுவோம். பிறகு, நிச்சயமாக அதை (-அதன் சாம்பலை) கடலில் பரப்பிவிடுவோம்.

உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் எல்லாம் அல்லாஹ்தான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் எல்லாவற்றையும் விசாலமாகி அறிகிறான்.

இவ்வாறு, முன் சென்றுவிட்டவர்களின் செய்திகளை உமக்கு விவரிக்கிறோம். இன்னும், திட்டமாக உமக்கு நம் புறத்திலிருந்து நல்லுபதேசத்தை கொடுத்தோம்.

யார் அதை புறக்கணித்தாரோ நிச்சயமாக அவர் மறுமை நாளில் பாவத்தை சுமப்பார்.

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அவர்கள் சுமக்கின்ற) பாவம் மறுமை நாளில் மிகக் கெட்ட சுமையாக இருக்கும்.

எக்காளத்தில் ஊதப்படும் நாளில் (அவர்கள் தங்கள் பாவ சுமையை சுமப்பார்கள்). இன்னும், அந்நாளில் பாவிகளை, - (அவர்களின்) கண்கள் நீல நீறமானவர்களாக இருக்கின்ற நிலையில் - நாம் எழுப்புவோம்.

அவர்கள் தங்களுக்கு மத்தியில், “நீங்கள் பத்து நாட்களே தவிர தங்கவில்லை” என்று மெதுவாகப் பேசுவார்கள்.

அவர்களில் அறிவால் முழுமையானவர், “நீங்கள் (உலகத்தில்) ஒரு நாளே தவிர தங்கவில்லை” என்று கூறும்போது அவர்கள் பேசுவதை நாம் நன்கறிந்தவர்கள் ஆவோம்.

அவர்கள் மலைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! “என் இறைவன் அவற்றை தூள் தூளாக ஆக்கி விடுவான்.”

ஆக, அவற்றை சமமான பூமியாக (ஆக்கி) விட்டுவிடுவான்.

அவற்றில் கோணலையும் வளைவையும் (மேடு பள்ளத்தையும்) நீர் காணமாட்டீர்.

அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. இன்னும், சத்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். (அங்கு பாதங்களின்) மென்மையான (நடை) சத்தத்தை தவிர நீர் செவிமடுக்க மாட்டீர்.

அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதித்து அவருடைய பேச்சை அவன் விரும்பினானோ அவரைத் தவிர (பிறருடைய) பரிந்துரை (எவருக்கும்) பலனளிக்காது.

அவர்களுக்கு முன் உள்ளதையும் (மறுமையில் நடக்கப் போவதையும்) அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (உலகில் அவர்கள் செய்த செயல்களையும்) அவன் நன்கறிவான். அவர்கள் அவனை முழுமையாக சூழ்ந்தறிய மாட்டார்கள்.

இன்னும், என்றும் உயிருள்ளவன் என்றும் நிலையானவனுக்கு முகங்கள் அடிபணிந்து விட்டன. அநியாயத்தை (-இணைவைப்பதை) சுமந்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.

இன்னும், யார், அவரோ நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் நன்மைகளை செய்வாரோ அவர் அநியாயத்தையும் (-பிறர் குற்றங்கள் தன்மீது சுமத்தப்படுவதையும்) (தனது நன்மைகள்) குறைக்கப்படுவதையும் பயப்பட மாட்டார்.

இவ்வாறே, இ(ந்த வேதத்)தை அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கினோம். இன்னும், அதில் எச்சரிக்கையை பலவாறாக விவரித்து (கூறி) இருக்கிறோம், அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக; அல்லது அது, அவர்களுக்கு ஒரு நல்ல புத்தியை ஏற்படுத்துவதற்காக.

ஆக, உண்மையாளனும் அரசனுமாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனில் (ஒரு வசனம் இறக்கப்பட்ட பின்னர்) அதனுடைய (முழு விளக்கம் தொடர்பான) வஹ்யி உமக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவசரப்ப(ட்டு பிறருக்கு ஓதி காண்பித்து வி)டாதீர்! இன்னும், கூறுவீராக: “என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!”

திட்டவட்டமாக இதற்கு முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். ஆனால், அவர் (அதை) மறந்து விட்டார். அவரிடம் நாம் (நமது கட்டளையை நிறைவேற்றுவதில்) உறுதியைக் காணவில்லை.

இன்னும், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்” என்று வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, இப்லீஸைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.

ஆக, நாம் கூறினோம்: “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரி ஆவான். ஆகவே, அவன் உங்கள் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிடாமல் இருக்கட்டும். (அப்படி நீர் வெளியேறிவிட்டால்) மிகுந்த சிரமப்படுவீர்.”

இ(ந்த சொர்க்கத்)தில் நீர் பசித்திருக்காத, நீர் ஆடையற்றிருக்காத பாக்கியம் நிச்சயமாக உமக்கு உண்டு.

இன்னும், நிச்சயமாக நீர் அதில் தாகிக்க மாட்டீர். இன்னும், வெப்பத்தை உணரமாட்டீர்.

ஆக, ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆதமே! (சொர்க்கத்தில்) நிரந்தரத்தை தரும் மரத்தையும் (உமக்கு) அழியாத ஆட்சி கிடைப்பதையும் நான் உமக்கு அறிவிக்கவா? என்று கூறினான்.

ஆக, அவ்விருவரும் அ(ந்த மரத்)திலிருந்து சாப்பிட்டனர். ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடங்கள் தெரிய வந்தன. இன்னும், சொர்க்கத்தின் இலைகளை அவ்விருவரும் தங்கள் மீது கட்டி (தங்கள் மறைவிடத்தை மறைத்து)க் கொள்வதற்கு முற்பட்டனர். ஆதம், தன் இறைவனுக்கு மாறுசெய்தார். ஆகவே, அவர் வழி தவறிவிட்டார்.

(அவர் தன் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்பு கோரிய) பிறகு அவருடைய இறைவன் அவரை தேர்ந்தெடுத்தான். ஆக, அவன் அவரை மன்னித்தான். இன்னும், (அவருக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கும் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கும்) நேர்வழி காட்டினான்.

(அல்லாஹ்) கூறினான்: “நீங்கள் இருவரும் (இப்லீஸ் உட்பட) அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர், சிலருக்கு எதிரி ஆவர். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால் எவர் எனது நேர்வழியை பின்பற்றுவாரோ அவர் வழிதவற மாட்டார். இன்னும், அவர் (மறுமையில்) சிரமப்பட மாட்டார்.

இன்னும், எவன் என் அறிவுரையை புறக்கணிப்பானோ நிச்சயமாக அவனுக்கு (மண்ணறையில்) மிக நெருக்கடியான வாழ்க்கைதான் உண்டு. இன்னும், மறுமையில் அவனை குருடனாக நாம் எழுப்புவோம்.

அவன் கூறுவான்: “என் இறைவா! என்னை குருடனாக ஏன் எழுப்பினாய், நான் பார்வை உள்ளவனாக இருந்தேனே?”

(அல்லாஹ்) கூறுவான்: “(உனது நிலை) அவ்வாறுதான். (ஏனெனில்,) எனது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆக, நீ அவற்றை (பின்பற்றாது) விட்டுவிட்டாய். அவ்வாறே இன்று நீ (நரகத்தில் கடும் தண்டனையை அனுபவிப்பவனாக) விட்டுவிடப்படுவாய்.”

இன்னும், யார் வரம்பு மீறுவாரோ; தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டாரோ அவரை இவ்வாறுதான் தண்டிப்போம். இன்னும், (அவனுக்கு) மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும்.

ஆக, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் தவறை) தெளிவுபடுத்தவில்லையா? இவர்கள் (தங்கள் பயணத்தில் அழிவுக்குள்ளான) அவர்களின் இருப்பிடங்களில் செல்கிறார்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.

(ஆதாரத்தை நிலை நிறுத்தாமல் அல்லாஹ் யாரையும் தண்டிக்கமாட்டான் என்ற) வாக்கும் (தண்டனை இறங்குவதற்கு என்று) ஒரு குறிப்பிட்ட தவணையும் உமது இறைவனிடம் முன்னரே முடிவாகி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (எல்லை மீறியவர்களுக்கு) அழிவு உடனே ஏற்பட்டிருக்கும்.

ஆக, (நபியே!) அவர்கள் கூறுவதை நீர் (பொறுமையுடன்) சகி(த்திரு)ப்பீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் அது மறைவதற்கு முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் உமக்கு கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்!

இன்னும், இ(ணைவைப்ப)வர்களில் (இவர்களைப்) போன்ற பலருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் கொடுத்த (இவ்வுலக) இன்பத்தின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். நாம் அவர்களை அதில் சோதிப்பதற்காக (கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடை (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்.

இன்னும், உமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! இன்னும், அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! நாம் (உமக்கோ மற்றவர்களுக்கோ நீர்) உணவளிக்கும்படி உம்மிடம் கேட்கவில்லை. நாமே உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான்.

“இவர் தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா?” என்று (இணைவைப்பவர்கள்) கூறுகிறார்கள். முந்திய வேதங்களில் உள்ளதை தெளிவுப்படுத்தும் (-குர்ஆன் என்னும்) உறுதியான சான்று அவர்களிடம் வரவில்லையா?

இன்னும், இதற்கு முன்னரே ஒரு தண்டனையைக் கொண்டு இவர்களை நாம் அழித்திருந்தால், “எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் இழிவடைவதற்கும் கேவலப்படுவதற்கும் முன்னர் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே!” என்று கூறி இருப்பார்கள்.

(நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் (உங்கள் முடிவை) எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, (இப்போதும் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள். சமமான (நேரான) பாதை உடையவர்கள் யார்? இன்னும், நேர்வழி பெற்றவர்கள் யார் என்பதை (உங்கள் மரணத்தின்போது) நீங்கள் விரைவில் அறிவீர்கள்.