The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Pen [Al-Qalam] - Tamil Translation - Omar Sharif
Surah The Pen [Al-Qalam] Ayah 52 Location Maccah Number 68
நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
(நபியே!) உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை.
நிச்சயமாக உமக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு.
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்.
ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,
உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று.
நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து யார் வழிதவறினானோ அவனை மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான்.
ஆக, (நபியே! உம்மையும் உமது மார்க்கத்தையும்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
நீர் (அவர்களுடன்) அனுசரித்து மென்மையாக போகவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அவர்களும் (உம்மை) அனுசரித்து மென்மையாக நடப்பார்கள்.
அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
நன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).
அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகிறான்.
(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்.
நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம், தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல். “அதிகாலை பொழுதை அவர்கள் அடையும்போது நிச்சயமாக அவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!
“அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை.
ஆக, அவர்கள் தூங்கியவர்களாக இருந்தபோது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை(யின் படி நெருப்பு) இரவில் அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) சுற்றியது (-சூழ்ந்து கொண்டது).
அ(ந்த தோட்டமான)து கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.
ஆக, அவர்கள் அதிகாலைபொழுதை அடைந்தபோது ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
அதாவது, நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள், நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால் (என்று அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டனர்).
ஆக, அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக புறப்பட்டு சென்றனர்,
அதாவது, இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அ(ந்த தோட்டத்)தில் நுழைந்து விடக்கூடாது என்று.
அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்.
ஆக, அவர்கள் அ(ந்த தோட்டத்)தைப் பார்த்தபோது, “நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்” என்று கூறினார்கள்.
“இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம்” (என்றும் கூறினார்கள்).
அவர்களில் நீதவான் கூறினார்: (நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று கூற வேண்டும் என்று) நான் கூறவில்லையா? (அதன்படி) நீங்கள் இன் ஷா அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டாமா!
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”
ஆக, அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர்.
அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் எல்லை மீறியவர்களாக (அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி கெட்டவர்களாக) இருந்தோம்.”
“எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த (தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் நம்பிக்கையும்) உள்ளவர்கள்.”
இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். இன்னும், மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியதாகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே!
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன.
ஆக, (நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்க(ளாகிய முஸ்லிம்க)ளை, (நமது கட்டளையை மீறுகின்ற நிராகரிப்பாளர்களாகிய) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
உங்களுக்கு என்ன ஆனது, எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?
(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கிறதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கிறீர்களா?
(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”
நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை நீடித்து இருக்கின்ற உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?)
(நபியே!) அவர்களிடம் கேட்பீராக! “அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?”
(இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? ஆக, அவர்கள் (தங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களின் (அந்த) கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) கொண்டு வரட்டும்.
கெண்டைக்கால் காண்பிக்கப்படுகிற நாளில் (தங்கள் கூட்டாளிகளை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிவதற்கு அழைக்கப்படுவார்கள். ஆக, அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.
அவர்களின் பார்வைகள் தாழ்ந்தவையாக இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலக வாழ்க்கையில்,) சுகமானவர்களாக இருந்தபோது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.)
ஆக, என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களுக்கு சூழ்ச்சி செய்வோம் (-கொஞ்சம் சுகம் கொடுத்து திடீரென தண்டிப்போம்).
இன்னும், அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக உறுதியானது.
(நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கிறீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா?
அவர்களிடம் மறைவானவை இருக்கிறதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை, அதாவது, முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல) அவர்கள் (அதில்) எழுதுகிறார்களா?
ஆக, (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர் - அவரோ கடும் துயரத்தில் மூழ்கியவராக இருக்கும் நிலையில் (தனது இறைவனை) அழைத்த நேரத்தில் (அவர் அவசரப்பட்டது போன்று அவசரப்பட்டு விடாதீர்! அவர் கோபப்பட்டது போன்று கோபப்பட்டு விடாதீர்)!
அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான, ஆபத்தான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராக இருந்தார்.
ஆக, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். ஆக, அவரை நல்லவர்களில் ஆக்கினான்.
நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை (உம்மிடமிருந்து அவர்கள்) செவியுற்றபோது. இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்” என்று.
(குர்ஆனாகிய) இது, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிர இல்லை.