عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The man [Al-Insan] - Tamil Translation - Omar Sharif

Surah The man [Al-Insan] Ayah 31 Location Madanah Number 76

காலத்தில் ஒரு பகுதி நேரம் மனிதனுக்கு (இப்படி) வரவில்லையா, (அந்த நேரத்தில்) நினைவு கூறப்படுகின்ற (-பேசப்படுகின்ற) ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை?

நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண்ணுடைய இந்திரியத்தில் இருந்து) கலக்கப்பட்ட விந்துத் துளியிலிருந்து படைத்தோம். அவனை நாம் சோதிக்கிறோம். ஆக, செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை ஆக்கினோம்.

நிச்சயமாக நாம் அவனுக்கு (நேரான) பாதையை வழிகாட்டினோம், ஒன்று, அவன் நன்றி உள்ளவனாக இருப்பதற்கு; அல்லது, நன்றி கெட்டவனாக இருப்பதற்கு.

நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களுக்கு (அவர்களின் கை, கால்களை கட்டுவதற்கு) சங்கிலிகளையும் விலங்குகளையும் கொழுந்து விட்டெரியக்கூடிய நெருப்பையும் தயார் செய்துள்ளோம்.

நிச்சயமாக நல்லவர்கள் மது குவளையிலிருந்து பருகுவார்கள், அதன் கலப்பு காஃபூர் நறுமணத்தால் இருக்கும்.

அ(ந்த நறுமணமான)து, ஓர் ஊற்றாகும். அதில் இருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள். அதை அவர்கள் (விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓட வைப்பார்கள்.

அவர்கள் நேர்ச்சையை (-தங்கள் மீதுள்ள கடமையான வணக்கங்களை) நிறைவேற்றுவார்கள். இன்னும், ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும்.

இன்னும், அவர்கள் உணவை - அதன் பிரியம் (-அதன் தேவை தங்களுக்கு) இருப்பதுடன் - ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பார்கள்.

“நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் (இதற்கு) கூலியையும் நன்றியையும் நாங்கள் நாடவில்லை.

நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் (பாவிகளின் முகங்கள்) கடுகடுக்கின்ற (குற்றவாளிகளின் நெற்றிகள்) சுருங்கிவிடுகின்ற ஒரு நாளை பயப்படுகின்றோம்.”

ஆக, அந்நாளின் தீமையில் இருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பான். இன்னும், அவன் அவர்களுக்கு முக செழிப்பையும் (பிரகாசத்தையும் அழகையும்) மன மகிழ்ச்சியையும் கொடுப்பான்.

இன்னும், அவர்கள் (வணக்க வழிபாட்டில், பாவங்களை விட்டு விலகி இருப்பதில், சோதனைகளை தாங்கிக் கொள்வதில்) பொறுமையாக இருந்ததால் அவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும் பட்டையும் (-பட்டாடைகளையும்) கூலியாகக் கொடுப்பான்.

அவர்கள் அதில் கட்டில்களில் சாய்ந்தவர்களாக (சொர்க்க இன்பங்களை அனுபவிப்பவர்களாக) இருப்பார்கள். அதில் சூரியனையோ குளிரையோ காண மாட்டார்கள். (அங்கு உஷ்ணமும் இருக்காது, கடும் குளிரும் இருக்காது.)

இன்னும், அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும். அவற்றின் கனிகள் மிக தாழ்வாக (பறித்து புசிப்பதற்கு இலகுவாக) ஆக்கப்பட்டிருக்கும்.

இன்னும், வெள்ளியினால் செய்யப்பட்ட பாத்திரங்களுடனும் கண்ணாடிகளாக இருக்கிற கெண்டிகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும்.

அவை வெள்ளி கலந்த கண்ணாடிகளாகும். அவற்றை (-அவற்றின் அளவையும் அழகையும்) அவர்கள் (-சொர்க்கவாசிகளுக்கு பானம் புகட்டுகின்ற பணியாளர்கள்) துல்லியமாக நிர்ணயிப்பார்கள்.

இன்னும் அதில் (-சொர்க்கத்தில்) மதுக் குவளையில் இருந்து அவர்களுக்கு (மது) புகட்டப்படும். அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.

அதில் உள்ள ஓர் ஊற்றாகும் அது. அதற்கு சல்சபீல் என்று பெயர் கூறப்படும்.

இன்னும் (சிறுவர்களாகவே) நிரந்தரமாக இருக்கும் சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். நீர் அ(ந்த சிறு)வர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களாக அவர்களை நினைப்பீர்.

இன்னும் (சொர்க்கத்தில்) நீர் எந்த இடத்தைப் பார்த்தாலும் பேரின்பத்தையும் பேராட்சியையும் நீர் பார்ப்பீர்.

அவர்களுக்கு மேல் (உள் புறம்) பச்சை நிற மென்மையான பட்டும் (வெளிப் புறம்) தடிப்பான பட்டு ஆடைகளும் இருக்கும். இன்னும் வெள்ளியினால் செய்யப்பட்ட காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களின் இறைவன் அவர்களுக்கு மிகத் தூய்மையான பானத்தை புகட்டுவான்.

நிச்சயமாக இவை (அனைத்தும்) உங்களுக்கு (-நீங்கள் செய்த நன்மைகளுக்கு) கூலியாக இருக்கும். உங்கள் (-சொர்க்கத்தைப் பெறுவதற்காக நீங்கள் செய்த) உழைப்பு நன்றி அறியப்பட்டதாக (பாராட்டுக்குரியதாக, நற்கூலிகளுக்கு தகுந்ததாக) இருக்கும்.

நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்த குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்.

ஆக, உமது இறைவனின் கட்டளைக்காக (-அவன் உம்மீது கட்டாயமாக்கிய கடமைகளையும் சுமத்திய பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில்) நீர் பொறுமையாக இருப்பீராக! அவர்களில் (எந்த ஒரு) பாவிக்கும் அல்லது நிராகரிப்பாளருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!

இன்னும், உமது இறைவனின் பெயரை காலையி(ல் ஃபஜ்ர் தொழுகையி)லும் மாலையி(ல் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளி)லும் நினைவு கூர்வீராக!

இன்னும், இரவில் அவனுக்காக சிரம் பணிந்து (மஃரிபு இன்னும் இஷா தொழுகைகளை) தொழுவீராக! இன்னும், நீண்ட நேரம் (உபரியான தொழுகைகள் மூலம்) அவனை தொழுது வணங்குவீராக!

நிச்சயமாக இவர்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள். இன்னும், அவர்களுக்கு முன்னர் இருக்கின்ற மிக கனமான ஒரு நாளை (-அந்நாளுக்காக நன்மைகளை சேகரிப்பதை) விட்டுவிடுகிறார்கள்.

நாம்தான் அவர்களை படைத்தோம், அவர்களின் படைப்பை (-உடல் உறுப்புகளை, மூட்டுகளை) உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (படைப்பால்) அவர்கள் போன்ற மனிதர்களை (ஆனால், அமல்களால் அவர்களுக்கு மாற்றமானவர்களை அவர்களுக்கு) பதிலாக நாம் கொண்டு வருவோம்.

நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆக, யார் (வெற்றி பெற) நாடுகிறாரோ அவர் தனது இறைவனின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.

அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் நாடமுடியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

அவன் யாரை நாடுகிறானோ அவரை தனது அருளில் அவன் பிரவேசிக்க வைக்கிறான். அநியாயக்காரர்கள் - துன்புறுத்தும் தண்டனையை அவர்களுக்காக அவன் தயார்செய்து வைத்துள்ளான்.