عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

Those who drag forth [An-Naziat] - Tamil Translation - Omar Sharif

Surah Those who drag forth [An-Naziat] Ayah 46 Location Maccah Number 79

(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!

(நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!

நீந்துவோர் மீது சத்தியமாக!

(இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!

காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்,)

பூமி(யும் மலையும் பலமாக) அதிருகின்ற நாளில்.

பின்தொடரக்கூடியது (-மக்கள் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறையாக எக்காளம் ஊதப்படுதல்) அதை பின்தொடரும்.

அந்நாளில், (சில) உள்ளங்கள் பயந்து நடுங்கும்.

அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ் நோக்கியவையாக இழிவுற்றதாக இருக்கும்.

(நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (இறந்துவிட்டால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’

(அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?

அவ்வாறாயின், அது (நமக்கு) நஷ்டமான திரும்புதல்தான் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள். (-நாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கும் நிலையில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் நமக்கு நரகம்தான். அது நமக்கு நஷ்டமாயிற்றே என்று கேலியாக பேசுகிறார்கள்.)

(மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் சத்தம்தான். (ஒரு முறை ஊதப்பட்டவுடன் மறுமை நிகழ்ந்து விடும்.)

அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.

(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?

“துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை நினைவு கூருங்கள்.

ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் எல்லை மீறினான்.

ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?”

“இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?”

ஆக, (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.

ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.

பிறகு (நிராகரிப்பில்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.

இன்னும், (மக்களை) ஒன்று திரட்டினான்; கூவி அழைத்தான்.

இன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.

ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான் (-தண்டித்தான்).

(அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.

(மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகப் பலமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அ(ந்த வானத்)தை அமைத்தான்.

அதன் முகட்டை அவன் உயர்த்தினான், இன்னும் (அதில் மேடு பள்ளம் இல்லாமல்) அதை சமப்படுத்தினான். (-ஒழுங்குபடுத்தினான்.)

இன்னும், (சூரியனை மறைய வைத்து) அதன் இரவை இருளாக்கினான், இன்னும், (சூரியனை உதிக்க வைத்து) அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.

இன்னும், அதன் பின்னர், பூமியை விரித்(து அதனுள் மனிதனுக்கு தேவையானவற்றை வைத்)தான்.

அதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.

இன்னும், மலைகளை (அதில்) ஆழமாக ஊன்றினான்.

உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றை எல்லாம் இறைவன் படைத்தான்).

ஆக, (-எக்காளத்தில் முதல் ஊதுதல் ஊதப்பட்டு மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,

மனிதன், தான் செய்ததை நினைத்துப் பார்க்கிற நாளில் (அந்த அழிவு நிகழும்).

இன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.)

ஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ,

இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,

(அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும்.

ஆக, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தனது) மன இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,

(அவனுக்கு) நிச்சயமாக சொர்க்கம்தான் தங்குமிடம் ஆகும்.

(நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.

(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அது பற்றி ஞானம் இல்லையே!)

உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு இருக்கிறது.

(நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுவோரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர, அது நிகழப்போகும் காலத்தை அறிவிப்பவரல்ல.)

அதை அவர்கள் (கண்ணால்) பார்க்கிற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில்) அவர்கள் தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத்) தோன்றும்.