عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

Ya Seen [Ya Seen] - Tamil Translation - Omar Sharif

Surah Ya Seen [Ya Seen] Ayah 83 Location Maccah Number 36

யா சீன்.

ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக!

நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர்.

நேரான பாதையின் மீது இருக்கிறீர்.

மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் (இது.)

ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இந்த வேதம் அருளப்பட்டது). அவர்களின் மூதாதைகள் (இதற்கு முன்னர் இறைத்தூதர்களால்) எச்சரிக்கப்படவில்லை. ஆகவே, அவர்கள் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களில் அதிகமானவர்கள் மீது (அல்லாஹ்வின் தண்டனையின்) வாக்கு திட்டவட்டமாக உறுதியாகிவிட்டது. ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகளில் அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை எப்போதும்) உயர்த்தியவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு முன்னர் ஒரு தடுப்பையும் அவர்களுக்கு பின்னர் ஒரு தடுப்பையும் நாம் ஆக்கினோம். ஆகவே, நாம் அவர்க(ளின் பார்வைக)ளை மறைத்து விட்டோம் (-குருடாக்கி விட்டோம்). ஆகவே, அவர்கள் பார்க்கமாட்டார்கள்.

நீர் அவர்களை எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு (இரண்டும்) சமம் தான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

நீர் எச்சரிப்ப(து பயன் தருவ)தெல்லாம் இந்த வேதத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை பயந்தவருக்குத்தான். ஆகவே, அவருக்கு மன்னிப்பையும் கண்ணியமான கூலியையும் நற்செய்தி கூறுவீராக!

நிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் (நன்மைகளின் பக்கம் அவர்கள் செல்லும்போது) அவர்களின் காலடிச் சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.

அவர்களுக்கு அந்த ஊர்வாசிகளை உதாரணமாக எடுத்துச் சொல்வீராக! அவர்களிடம் தூதர்கள் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!

அவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது ஆக, அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவர் மூலமாக (முந்திய இருவரை) பலப்படுத்தினோம். ஆக, (அந்த மூவரும்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்”.

அவர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நீங்கள் இல்லை. இன்னும், ரஹ்மான் எதையும் (உங்கள் மீது) இறக்கவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களாகவே தவிர இல்லை.”

(தூதர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று எங்கள் இறைவன் நன்கறிவான்.”

தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமை இல்லை.

அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் விலகவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறி(ந்து கொன்று விடு)வோம். இன்னும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் தண்டனை நிச்சயமாக உங்களை வந்தடையும்.”

அவர்கள் கூறினார்கள்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் (தெளிவாக அழகிய முறையில்) அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகிற மக்கள் ஆவீர்கள்.

பட்டணத்தின் கடைக்கோடியில் இருந்து ஓர் ஆடவர் விரைந்து வந்தார். அவர் கூறினார்: “என் மக்களே! இந்த தூதர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.”

“உங்களிடம் அறவே கூலி கேட்காத (இந்த நல்ல)வர்களை பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள்.”

என்னைப் படைத்தவனை நான் வணங்காமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது? அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

அவனை அன்றி (வேறு) தெய்வங்களை நான் எடுத்துக் கொள்வேனா! (அந்த) ரஹ்மான் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவற்றின் சிபாரிசு என்னை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது. இன்னும், அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்.

அப்போது (-அவற்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டால்) நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில்தான் சென்று விடுவேன்.

நிச்சயமாக நான் உங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டேன். ஆகவே, எனக்கு செவிசாயுங்கள்!

(அவருக்கு) கூறப்பட்டது: “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று. அவர் கூறினார்: “என் மக்கள் அறிய வேண்டுமே,

எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும்; அவன் என்னை கண்ணியமானவர்களில் ஆக்கியதையும்!”

அவருக்குப் பின்னர் அவருடைய மக்கள் மீது வானத்தில் இருந்து ஒரு ராணுவத்தை நாம் இறக்கவில்லை. நாம் (அப்படி) இறக்குபவர்களாகவும் இல்லை.

(அந்த தண்டனை) ஒரே ஒரு சத்தமாகவே தவிர இருக்கவில்லை. ஆக, அப்போது அவர்கள் அழிந்து (இறந்து) விட்டார்கள்.

அடியார்கள் மீது நிகழ்ந்த துக்கமே! அவர்களிடம் எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் அவரை கேலி செய்பவர்களாக இருந்தே தவிர.

“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கிறோம், நிச்சயமாக அவர்கள் தங்கள் பக்கம் திரும்பி வரமாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்க மாட்டார்களா?

(அவர்கள்) எல்லோரும் நம்மிடம் கண்டிப்பாக கொண்டுவரப்படுவார்கள்.

இறந்துபோன (-காய்ந்து போன) பூமி அவர்களுக்கான (நமது வல்லமையை விளக்கும்) ஓர் அத்தாட்சியாகும். அதை நாம் உயிர்ப்பித்தோம். இன்னும், அதிலிருந்து வித்துக்களை வெளியாக்கினோம். ஆக, அதிலிருந்துதான் அவர்கள் (தங்கள் உணவுகளை) சாப்பிடுகிறார்கள்.

இன்னும், பேரீச்ச மரங்களையும் திராட்சைகளின் தோட்டங்களையும் அதில் நாம் ஏற்படுத்தினோம்; இன்னும், ஊற்றுக்கண்களை அதில் பிளந்தோடச் செய்தோம்,

அவன் படைத்த கனிகளில் இருந்து அவர்கள் புசிப்பதற்காக. இன்னும், இவற்றை அவர்களின் கரங்கள் செய்யவில்லை. ஆகவே, இவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா?

பூமி முளைக்க வைக்கக்கூடியதிலும் (-தாவரங்களிலும் மனிதர்களாகிய) அவர்களிலும் இன்னும் அவர்கள் அறியாதவற்றிலும் (மாறுபட்ட நிறங்களையும் ருசிகளையும் உடைய) எல்லா வகைகளையும் (ஆண், பெண் ஜோடிகளையும்) படைத்தவன் மிகப் பரிசுத்தமானவன்.

இன்னும், இரவும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதிலிருந்து பகலை நாம் கழட்டிவிடுகிறோம். அப்போது அவர்கள் (முற்றிலும் இரவின்) இருளில் ஆகிவிடுகிறார்கள்.

இன்னும், சூரியன் தனது இருப்பிடத்தை நோக்கி ஓடுகிறது. அது, (அனைத்தையும்) நன்கறிந்தவன் (யாவரையும்) மிகைத்தவனுடைய ஏற்பாடாகும் (-திட்டமிடுதலாகும்).

இன்னும், சந்திரன் - பல தங்குமிடங்களில் தங்கும்படி அதை நாம் திட்டமிட்டோம். இறுதியாக, அது பழைய (காய்ந்த மெலிந்த வலைந்த) பேரீச்சை குலையைப் போல் திரும்பிவிடுகிறது.

சூரியன் - சந்திரனை அடைந்து கொள்வது அதற்கு ஆகுமாகாது. இன்னும், இரவு பகலை முந்திவிடாது. (இரவும் பகலும் அவை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் குறித்த நேரத்தை அவை முந்தியும் விடாது, பிந்தியும் விடாது.) ஒவ்வொன்றும் ஒரு சுற்றுப் பாதையில் நீந்துகின்றன. (-சுற்றுகின்றன.)

இன்னும், நிச்சயமாக நாம் (மக்களால்) நிரம்பிய கப்பலில் அவர்களின் சந்ததிகளை பயணிக்க வைத்திருப்பதும் அவர்களுக்கு (நமது) அத்தாட்சியாகும்.

இன்னும், அதைப் போன்று அவர்கள் வாகனிப்ப(தற்கு தேவையான)தை (-கால தேவைகளுக்கு ஏற்ப பல வகையான சிறிய பெரிய கப்பல்களையும் நிலத்தில் செல்லும் வாகனங்களையும்) நாம் அவர்களுக்கு படைப்போம்.

இன்னும், (அவர்கள் கடலில் பயணிக்கும்போது) நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்கு உதவியாளர் அறவே இருக்க மாட்டார். இன்னும், அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.

எனினும் நமது கருணையினாலும் சில காலம் வரை (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (பாவிகளான அவர்களை நாம் கடலில் மூழ்கடிப்பதில்லை).

உங்களுக்கு முன்னுள்ளதையும் (முந்திய சமுதாயத்திற்கு இறக்கப்பட்ட தண்டனையையும்) உங்களுக்கு பின்னுள்ளதையும் (மறுமையின் தண்டனையையும்) நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்! என்று அவர்களுக்கு கூறப்பட்டால் (அவர்களோ அதை புறக்கணித்து சென்று விடுகிறார்கள்.)

அவர்களிடம் அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் இருந்து ஓர் அத்தாட்சி வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தே தவிர.

அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி கூறுகிறார்கள்: “அல்லாஹ் நாடினால் எவருக்கு உணவளித்து விடுவானோ அவருக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் தெளிவான தவறிலேயே தவிர (சரியான கருத்தில்) இல்லை.” என்று (முஸ்லிம்களைப் பார்த்து கூறுகிறார்கள்).

இன்னும், “இந்த வாக்கு எப்போது நிகழும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரே ஒரு சத்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அ(ந்த சத்தமான)து (ஒரு நாள்) அவர்களைப் பிடித்துக் கொள்ளும். (அப்போது) அவர்கள் (உலக காரியங்களைப் பற்றி) தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆக, அவர்கள் மரண சாசனம் கூறுவதற்கு சக்தி பெற மாட்டார்கள். இன்னும், தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள். (அதற்குள் மறுமை நிகழ்ந்துவிடும்).

இன்னும், எக்காளத்தில் ஊதப்படும். அப்போது அவர்கள் புதைக்குழிகளில் இருந்து தங்கள் இறைவன் பக்கம் விரைவாக வெளியேறி வருவார்கள்.

(இறை மறுப்பாளர்கள்) கூறுவார்கள்: “எங்கள் நாசமே! யார் எங்களை எங்கள் புதைக்குழியில் இருந்து எழுப்பியது?” (அதற்கு நம்பிக்கையாளர்கள் பதில் கூறுவார்கள்:) “இ(ந்த மறுமை நாளான)து எதை ரஹ்மான் வாக்களித்தானோ, தூதர்கள் உண்மை கூறினார்களோ அதுவாகும்.”

அ(ந்த மறுமை நிகழ்வதான)து ஒரே ஒரு சத்தமாகவே தவிர இருக்காது. ஆக, அப்போது அவர்கள் அனைவரும் நம்மிடம் ஆஜர் படுத்தப்படுவார்கள்.

இன்றைய தினம் ஓர் ஆன்மாவிற்கு சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. இன்னும், (அடியார்களே!) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

நிச்சயமாக சொர்க்கவாசிகள் இன்று (தங்களுக்கு சுகமளிக்கும்) வேளையில் இன்புற்றவர்களாக இருப்பார்கள்.

அவர்களும் அவர்களின் மனைவிகளும் நிழல்களில் கட்டில்கள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு அதில் கனிகள் உண்டு. இன்னும், அவர்கள் ஆசைப்படுவதும் அவர்களுக்கு கிடைக்கும்.

(உங்கள் மீது) ஸலாம் உண்டாகட்டும் என்று மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து கூறப்படும்.

குற்றவாளிகளே! இன்றைய தினம் (நல்லவர்களை விட்டும்) நீங்கள் பிரிந்து விடுங்கள்!

ஆதமின் மக்களே! ஷைத்தானை நீங்கள் வணங்காதீர்கள் என்று உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா? நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்.

இன்னும், நிச்சயமாக என்னை வணங்குங்கள்! இதுதான் நேரான பாதையாகும்.

இன்னும், அவன் உங்களில் அதிகமான மக்களை திட்டவட்டமாக வழிகெடுத்துள்ளான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருக்கவில்லையா?

இதுதான் நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகமாகும்.

இன்று அதில் நீங்கள் எரிந்து பொசுங்குங்கள், நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்.

இன்று நாம் அவர்களின் வாய்கள் மீது முத்திரையிடுவோம். இன்னும், அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும்.

நாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். ஆக, அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்ப்பார்கள்!

நாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்து (அவர்களை உருமாற்றி அழித்து) இருப்போம். ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (பின்னால்) திரும்பி வரவும் மாட்டார்கள்.

நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கிறோமோ படைப்பில் (-உருவத்தில் பழைய நிலைக்கு) அவரை திருப்பி விடுவோம். (பலமுள்ளவராக இருந்தவரை பலவீனராக மாற்றிவிடுவோம். இதை) அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?

நாம் அவருக்கு கவிதைகளை கற்றுத்தரவில்லை. அது அவருக்கு தகுதியானதும் இல்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் அன்றி வேறில்லை.

(உள்ளத்தால்) உயிருள்ளவராக இருப்பவரை அது எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்பாளர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விடுவதற்காகவும் (இந்த வேதத்தை நாம் அவருக்கு இறக்கினோம்).

நிச்சயமாக நாம் அவர்களுக்கு நமது கரங்கள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்ததை அவர்கள் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆக, அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.

இன்னும், நாம் அவற்றை அவர்களுக்கு பணியவைத்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உண்டு. இன்னும், அவற்றி(ன் மாமிசங்களி)லிருந்து அவர்கள் புசிக்கிறார்கள்.

இன்னும் அவர்களுக்கு இவற்றில் (-கால்நடைகளில் பலவிதமான) பலன்களும் (குறிப்பாக) குடிபானங்களும் உள்ளன. ஆக, (இவற்றை வழங்கிய அல்லாஹ்விற்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

(இணைவைக்கின்ற) அவர்கள் உதவி செய்யப்படுவதற்காக அல்லாஹ்வை அன்றி பல கடவுள்களை (சிலைகளை தெய்வங்களாக) ஏற்படுத்திக் கொண்டனர்.

(அந்த சிலைகளோ) அவ(ற்றை வணங்குகிறவ)ர்களுக்கு உதவி செய்ய சக்தி பெறமாட்டார்கள். அ(ந்த சிலைகளை வணங்குப)வர்கள் அவர்க(ள் வணங்கும் சிலைக)ளுக்கு முன் தயாராக இருக்கும் இராணுவமாக இரு(ந்து சிலைகளை பாதுகா)க்கிறார்கள்.

ஆக, அவர்களின் பேச்சு உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் மறைத்து பேசுவதையும் அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதையும் நன்கறிவோம்.

நிச்சயமாக நாம் மனிதனை ஓர் இந்திரியத் துளியில் இருந்து படைத்துள்ளோம் என்பதை அவன் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆனால், அவனோ தெளிவாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

அவன் நமக்கு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். தான் படைக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். அவன் கூறுகிறான்: “எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் இருக்கும்போது யார் உயிர்ப்பிப்பான்?”

(நபியே!) கூறுவீராக! “அவற்றை முதல் முறை உருவாக்கியவன்தான் அவற்றை (மறுமுறையும்) உயிர்ப்பிப்பான். இன்னும், அவன் எல்லா படைப்புகளையும் நன்கறிந்தவன் ஆவான்.”

அவன், பசுமையான பச்சை மரத்தில் இருந்து உங்களுக்கு நெருப்பை ஏற்படுத்தி இருக்கிறான். ஆக, அப்போது நீங்கள் அதில் நெருப்பை மூட்டிக் கொள்கிறீர்கள்.

இன்னும், வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களை படைப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா? ஏன் இல்லை! அவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன் ஆவான்.

அவன் எதையும் நாடினால் அவனது கட்டளை எல்லாம், ‘ஆகு’ என்று அதற்கு அவன் கூறுவதுதான். உடனே அது ஆகிவிடும்.

ஆக, எவனுடைய கரத்தில் எல்லா பொருட்களின் பேராட்சி இருக்கிறதோ அவன் மகா பரிசுத்தமானவன். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.